வாடிக்கையாளர்களை பற்றி அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி (KYC) விதிமுறைகளை மீறியதாக, நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி 1.75 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, அலகாபாத் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு 1.75 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. அதிலும் பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, யூகோ உள்ளிட்ட வங்கிகளுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், இதில் கார்ப்பரேஷன் வங்கிக்கு மட்டும் 25 லட்சம் ரூபாயும் அபராத தொகையாக செலுத்துமாறும் கூறியுள்ளது
கே.ஒய்.சி பற்றிய விதிமுறைகள், பணமோசடி தடுப்பு தர நிலைகள் மற்றும் நடப்பு கணக்கு திறப்பது போன்றவற்றின் சில விதிமுறைகள் அடிப்படையில், விதிமுறைகளை மீறிய இந்த நான்கு வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதோடு தவறுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்ததை அடுத்து தான், இந்த நான்கு வங்கிகளில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறியப்பட்டது என்கிறது ரிசர்வ் வங்கி. அதோடு இந்த நான்கு வங்கிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாராக்கடனால் முடங்கியுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு இது பெருத்த அடியாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதோடு வருகிற ஜூலை 5-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட் தாக்கலை செய்ய உள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு இப்படி ஒரு அபராதம் கொடுத்திருப்பது வங்கி வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.